சென்னை: 2020-21ம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி திட்டத்திற்கு ரூ.726 கோடியே 31 லட்சம் ஒதுக்கீடு செய்து, 7 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அதேபோல், 100 மூன்றாம் பாலினரை கொண்டு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மூன்றாம் பாலினர் தையற் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.மூன்றாம் பாலினர் தங்களது தனிப்பட்ட விவரங்களை பிறர் அறிந்திடாத வண்ணம் தாமாகவே முன்வந்து பதிவு செய்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கைபேசி செயலியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் மதுமதி, சமூகநல ஆணையர் ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.