×

சர்வதேச பிரபலங்களால் பாஜகவுக்கு புது நெருக்கடி... அவதூறு பதிவை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை : ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி:சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு மத்தியில், விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது குறித்து டுவிட்டர் நிர்வாகத்தை  மத்திய அரசு எச்சரித்துள்ளது.டெல்லி எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் டுவிட்டரில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக  சர்வதேச பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக அடுத்தடுத்து டுவிட்டுகளை பதிவிட்டு வருவதால், மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பிரபலங்களின் டுவிட்டுகளுக்கு  இந்திய பிரபலங்களும் எதிர்வினையாற்றி வருவதால், டுவிட்டர் பதிவுகள் முக்கியத்துவம் பெறுவதுடன் சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது.

மேலும், விவசாயிகளை மத்திய அரசு படுகொலை செய்கிறது என்ற ரீதியிலான பதிவுகளும், ஹேஷ்டேக்குகளும் பரவி வருகின்றன. எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி, சமூக அமைதியை சீர்குலைக்கும்  நோக்கத்துடன் பதிவிடப்பட்டிருக்கும் இந்த ஹேஷ்டேக்கையும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டு வருவோரின் கணக்குகளையும் முடக்குமாறு டுவிட்டர்  நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன்பேரில், 257க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால், நேற்று முன்தினம் முதல் முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. அதேபோல்,  சர்ச்சைக்குரிய ஹேஷ்டேக்கும் மீண்டும் வைரலானது. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை சார்பில் நேற்று கடிதம் ஒன்று  அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அடிப்படை ஆதாரமற்ற பதிவுகள் டுவிட்டரில் வெளியாகி வருகின்றன. இவை யாவும்பொய்யான தகவல்களை கொண்டிருப்பது  மட்டுமல்லாமல், வன்முறையை தூண்டும் வகையிலும், மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருக்கின்றன. குற்றச்செயல்களை தூண்டும் விதமான பதிவுகளை கருத்து சுதந்திரம் என்று எடுத்துக்  கொள்ள முடியாது. சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும். டுவிட்டர் நிறுவனத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கையால், குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும் சூழல்  உருவாகிவிடும். எனவே, சமூகத்தில் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கத்துடன் மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு டுவிட்டர் நிறுவனம் இணங்கி நடக்க வேண்டும். இல்லையெனில், கடும்  நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இந்த விவகாரங்களில் நீதிமன்றம் போல டுவிட்டர் நிறுவனம் செயல்பட முடியாது’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : crisis ,celebrities ,BJP ,government , மத்திய அரசு
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...