சென்னை: ஆந்திராவில் பதுங்கி இருந்த சென்னை கூலிப்படை தலைவன் கல்வெட்டு ரவியை போலீசார் கைது செய்துள்ளனர். 6 கொலை உள்ளிட்ட 35 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவி சமீபத்தில் தான் பாஜக-வில் சேர்ந்தார். அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், தலைமறைவான கல்வெட்டு ரவி தற்போது சிக்கியுள்ளார்.
கல்வெட்டு ரவி வடசென்னையை கலக்கிய பெரிய ரவுடி ஆவார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ரவி; தாம் திருந்திவிட்டதாகவும், சமூதாய பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றங்களில் 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்தது. அந்த வழக்குகளில் கல்வெட்டு ரவி ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
அதனையடுத்து கல்வெட்டு ரவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்குள் அவர் தலைமறைவானதால், தேடும் பணி போலீசாரால் முடிக்கிவிடப்பட்டது. இந்தநிலையில் ரவி இருக்கும் இடம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் ஆந்திரவில் பதுங்கி இருந்ததால் அங்கு விரைந்த தனிப்படை போலீசார் ரவியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.