×

இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம் அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படலாம் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் செயல்பட்டுவரும் நிலையில் வரும் 28ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பள்ளிகளும், மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து அண்ணா பல்கலைகழகம் உறுப்பு கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  பி.இ, பி.டெக் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியும் வகுப்புகள் தொடங்க வேண்டும்.  எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி வகுப்புகள் தொடங்க வேண்டும். கட்டிடக்கலை படிப்புகளுக்கும் வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

Tags : commencement ,Anna University ,classes , அண்ணா பல்கலை
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...