×

தமிழகம் ஒரு மதசார்பற்ற மாநிலம்...தமிழ் கடவுளாக முருகனை அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும் : நீதிபதிகள் கருத்து

மதுரை : தமிழ் கடவுளாக முருகப்பெருமானை அறிவிக்கக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முருகன் எனும் பெயருக்கு அழகு, திறமை, அறிவு, இளமை என பல பொருட்கள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், முருகனைத் தமிழ்க்கடவுள் என்று பலரும் அழைப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் முருகனை தமிழ் கடவுளாக எவ்வாறு இதுபோல அறிவிப்பு செய்து அரசிதழில் வெளியிட முடியும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் தைப்பூசத்தை போலவே கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட விழாக்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு கடவுளைப்பற்றி பாடி உள்ளது.எனவே இலக்கிய அடிப்படையில் முடிவு எடுக்க இயலாது. தமிழகம் ஒரு மதசார்பற்ற மாநிலம். பல மொழி, மதம், நம்பிக்கையை கொண்ட மக்கள் வசித்து வரும் சூழலில் இதுபோல அறிவிப்பது மதசார்பற்ற தன்மையை பாதிக்கும்.ஆகவே அவ்வாறு உத்தரவிட இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Tags : Tamil Nadu ,state ,Murugan ,God , Muruga
× RELATED கோவளத்தில் இப்தார் நோன்பு திறப்பு