சென்னை : தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அரியணை ஏறப்போவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3ம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய பேரவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாளைய முதல்வரும் நிரந்தர முதல்வரும் எடப்பாடி பழனிசாமி தான் என புகழாரம் சூட்டினார். பின்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.127 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் 644 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் நூலகம் அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதேபோல் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி,தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வானம் மும்மாரி பெய்து அதற்கான இசைவினை தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி முழுவதும் புதைவிட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது,என்றார்.