×

செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு ரூ.3.50 கோடி நிதி வழங்கினார் முதல்வர் பழனிசாமி!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களிடம் வழங்கினார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 26.8.2018 அன்று நடைபெற்ற  திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில்,  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.  

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கு முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 16.9.2019 அன்று 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், 1.6.2020 அன்று இரண்டாம் கட்டமாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களிடம் வழங்கினார்கள்.அதன் தொடர்ச்சியாக, தற்போது மூன்றாம் கட்டமாக, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில்  3 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Palanisamy ,district ,Jayalalithaa ,Chengalpattu ,Payyanur , முதல்வர் பழனிசாமி
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...