சென்னை: அதிமுக - பாமக இடையே தேர்தல் கூட்டணி மற்றும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டதால், மீண்டும் பேச முடிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் முறையாக அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோன்று அதிமுக கூட்டணியிலும் கடந்த மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட்ட பாஜ, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் இணைந்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற ஒவ்வொரு கட்சியும் பல கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது.
ஒவ்வொரு கட்சியும் கேட்கும் தொகுதிகள், அவர்கள் வைக்கும் கோரிக்கையை பார்த்து கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக அதிர்ந்து போயும், மலைத்து போயும் உள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்ட பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திடீரென ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளார். அதாவது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் மட்டுமே அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அதிரடியாக அறிவித்தார். இதோடு மட்டும் நிற்காமல் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு நீடித்து வந்தது.வன்னியர்கள் இடஒதுக்கீடு பிரச்னைக்கு முடிவு எடுத்தால் மட்டுமே கூட்டணிக்கு வருவோம் என்று வெளிப்படையாகவே ராமதாஸ் தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது சம்பந்தமாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கடந்த டிசம்பர் 1ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி
பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால்தான், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் முன் வைக்கிறார் என்று பேச்சு எழுந்தது. இதனால் ராமதாசை சமாதானப்படுத்த கடந்த டிசம்பர் மாதம் தமிழக அமைச்சர்கள் அன்புமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு, தேர்தலில் பாமகவுக்கு 41 தொகுதி வேண்டும் என்றும், கூடுதலாக சில கோரிக்கைகளையும் ராமதாஸ் முன் வைத்ததாக கூறப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு சரியான பதில் தெரிவிக்கவில்லை. பாமக கேட்பதைபோல வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் தங்கள் சமூகத்தினருக்கும் இடஒதுக்கீடு கேட்டு போர்க்கொடி தூக்கும். அப்படி அவர்கள் எல்லாரும் போர்க்கொடி தூக்கினால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை தான் ஏற்படும் என கருதி பாமக உடனான பேச்சுவார்த்தையை தொடங்குவதில் அதிமுக காலம்தாழ்த்தி வந்தது.
இதனால் அதிமுக-பாமக கூட்டணி உறுதியாவது சந்தேகம் தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், அதிமுகவை மிரட்டும் வகையில் பாமக நிர்வாக குழு கூட்டம் ஜனவரி 31ம் தேதி இணையவழி மூலமாக நடைபெறும் என்றும், இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கடந்த வாரம் பகிரங்கமாக ராமதாஸ் அறிவித்தார். இதனால் பதட்டம் அடைந்த அதிமுக தலைமை, அவசர அவசரமாக கடந்த 30ம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கொண்ட 4 பேர் குழுவை தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவினர் கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேறு சில கோரிக்கைகள் குறித்தும் பேசினர். மேலும், தற்போது இடஒதுக்கீடு அளித்தால் அனைத்து சாதியினரும் இதே கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என்பதை விளக்கி கூறினர். அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு தனி ஒதுக்கீடு என்பதிலிருந்து இறங்கி வந்த பாமக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, பாமக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்களை விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11.15 மணிக்கு சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏ.கே.மூர்த்தி, தீரன், அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, வழக்கறிஞர் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். இதையடுத்து அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் அமைச்சர் தங்கமணி வீட்டுக்கு வந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசியுள்ளனர். இட ஒதுக்கீடு அறிவித்தால் கூட்டணியை உறுதி செய்ய தயார் என்று பாமகவினர் தெரிவித்தனர். ஆனால் இட ஒதுக்கீடு வழங்க தென் மாவட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவு அமைச்சர்கள் தங்கள் சமூகத்திற்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இது குறித்தும் பேசப்பட்டுள்ளது.இதனால் தொகுதி குறித்து பேசலாம் என்று அதிமுக தரப்பில் பேசப்பட்டுள்ளது. 20 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். தேர்தல் செலவுக்கான பணத்தை தலைமையிடம் கொடுக்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் 20 முதல் 25 தொகுதிகள் வரை தர தயாராக இருப்பதாக பேசியுள்ளனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாமக நிர்வாகிகள் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதேபோன்று அதிமுக அமைச்சர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக சார்பில் வைக்கப்படும் கோரிக்கை மற்றும் அதற்கான பதில் குறித்து கேட்டு, அதை பாமக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு மதியம் 1.45 மணிக்கு தனித்தனி காரில் வெளியே புறப்பட்டு சென்றனர். அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரடியாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி இல்லத்துக்கு சென்றனர். அவரிடம் பாமக நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளித்தனர். அதேபோன்று, பாமக நிர்வாகிகள் சென்னை, தி.நகரில் உள்ள அன்புமணி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்து ராமதாசிடம் பேச்சுவார்தை விவரங்களை தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எந்த முடிவையும் எடுக்காததால், பேச்சுவார்த்தையில் இழுபறியே நீடித்து வருகிறது. இதனால் மீண்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர்.
அதிகாரிகள் இல்லாமல் இடஒதுக்கீடு பேச்சு
அதிமுக, பாமக பேச்சுவார்த்தையில் இடஒதுக்கீடு குறித்து பேசப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு எப்படி வழங்கலாம் என்பதை கூறுவது அதிகாரிகள்தான். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் இடம்பெறவில்லை. இதனால் அதிகாரிகள் இல்லாமல் என்ன பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்று பாமகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க நாடகமாக நடத்தப்படுகிறதா என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் இட ஒதுக்கீடு
வழங்குவது குறித்து எந்த முடிவையும் எடுக்காததால், இழுபறியே நீடித்து வருகிறது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் முடிவு செய்துள்ளனர்.