டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, தடயங்களை சேகரித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஜனவரி 26 அன்று ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறைகளில் வைக்கப்பட்டுள்ள 115 பேரின் பட்டியலை நாங்கள் வெளியிடுகிறோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். ஜனவரி 26 -ம் தேதி கிசான் அந்தோலனில் பங்கேற்ற பின்னர் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தேடும் மக்களுக்கு இது உதவும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.