வேலூர் : வேலூர் ரங்காபுரம் பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பாலாறு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. இன்றைக்கு சுற்றுச்சூழல் சீரழிவால் பாழ்பட்டு உள்ளது.
மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.மணல் கொள்ளையால் பாலாற்றில் பல இடங்களில் முட்செடிகள் முளைத்து காடு போல் மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய பாலாற்றில் நீர்வரத்து குறைந்தது. ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயனக் கழிவுகள், மணல் கொள்ளை என பலமுனை தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இன்றைக்கு அழிவின் பிடியில் பாலாறு சிக்கித் திணறுகிறது.
இந்நிலையில் வேலூர் மாநகரின் பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் நாள்தோறும் பாலாற்றில் கொட்டப்படுகிறது. குறிப்பாக வேலூரில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை பாலாற்றில் கொட்டி எரித்து வருவது தொடர்கதையாக உள்ளது.
வேலூர் ரங்காபுரத்தில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் பகுதியில் குவியல் குவியலாக பிளாஸ்டிக் கழிவுகளை சமூக விரோதிகள் கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. அதேபோல் காற்று மாசுபாடு உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.
எனவே பாலாறு சீரழிவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலாற்றில் மருத்துவக்கழிவுகள் கொட்டும் நபர்களுக்கு அதிகளவு அபராதம், தண்டனை விதிக்காமல் மாசு கட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.