×

சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் ஜி.கே. மணி சந்திப்பு!: அதிமுக - பாமக கூட்டணி தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை..!!

சென்னை: சென்னையில் அதிமுக மற்றும் பாமக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்தையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையில் பாமக பிடிவாதமாக இருக்கும் நிலையில் அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தலை சேர்ந்து எதிர்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தேமுதிக போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று பேசப்பட்டுவந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் அங்கம் வகிப்பது இன்னும் முடிவாகவில்லை என்ற கருத்து கூறப்பட்டு வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சமூதாயத்திற்கான தனி இடஒதுக்கீடு கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தனி இடஒதுக்கீடு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல் சாதிவாரி கணக்கெடுப்பிற்கான உத்தரவு மட்டும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. வன்னியர் சமூதாயத்திற்கான தனி இடஒதுக்கீடு என்பது இறுதிசெய்யப்பட்டு அறிவித்த பின்னரே அதிமுக உடனான கூட்டணி குறித்த முடிவினை பாட்டாளி மக்கள் கட்சி எடுக்கும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். வன்னியர் சமூதாயத்திற்கான தனி உள்ஒதுக்கீடு, அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி தொடர்பான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை இதற்கு முன்னர் நடைபெற்றது.

சைதாப்பேட்டையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக முதல்வர், துணை முதல்வர் உடனான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது. 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தியில் கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டதாக பாமக சார்பிலோ அதிமுக சார்பிலோ அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மாற்றாக கூட்டணியில் சலசலப்பு இல்லை என்ற கருத்து மட்டும் அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் அதிமுக - பாமக கூட்டணி தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Thangamani ,GK ,Chennai ,meeting ,BJP ,AIADMK ,alliance talks , Chennai, Minister Thangamani, G.K. Wason, meeting
× RELATED பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3...