ஊட்டி : ஊட்டி கல்லட்டி சாலை நன்றாக இருக்கும் நிலையில், தற்போது தார் கலவை கொண்டு செப்பனிடப்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி, முதுமலை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கூடலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதுதவிர தலைக்குந்தாவில் இருந்து கல்லட்டி வழியாக மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை மிகவும் சரிவான, குறுகலான வளைவுகளை கொண்டதாக உள்ளது. அதிக விபத்துகள் நடக்கும் சாலையாக உள்ளதால், இச்சாலையை அகலப்படுத்துதல், சாலை அமைத்தல், சாலையோர தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சாலையில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கீழிருந்து ஊட்டி நோக்கி மட்டும் வெளியூர் மற்றும் வெளிமாநில வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இச்சாலையில் தலைக்குந்தா முதல் மசினகுடி வரை தார் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நன்றாக இருக்கும் இச்சாலையானது மீண்டும் தார் கலவை கொண்டு செப்பனிடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தார் கலவை கொண்டு வரப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நன்றாக இருக்கும் சாலையை சீரமைப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.