×

நாம் ஏன் இதுகுறித்து பேசுவதில்லை?: டெல்லி எல்லையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு அமெரிக்க பாடகி ரிஹானா ஆதரவு..!!

வாஷிங்டன்: சர்வதேச பாப் இசை கலைஞரான ரிஹானா டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பலகட்ட  பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் தீர்வு எட்டப்படவில்லை. குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியிலும் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் இம்மாதம் 6ம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகப்புகழ் பெற்ற பாடகி ரிஹானா, குரல் கொடுத்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கொள்காட்டி, நாம் ஏன் இதுகுறித்து பேசுவதில்லை? என்று ரிஹானாகேள்வி எழுப்பியிருந்தார். மேலும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றையும் பதிந்துள்ளார்.

அவரது ட்விட்டை லட்சக்கணக்கானோர் பகிர்ந்ததுடன் ஆதரவாகவும் பதிவிட்டனர். அவரது பதிவிற்கு இந்தியாவிலும் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல. இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள். துண்டாடப்பட்ட நாட்டை சீனா கைப்பற்றி, அமெரிக்காவைப் போல் சீன பகுதியாக மாற்ற முயற்சிக்கும். உங்களைப் போல் நாங்கள் நாட்டை விற்க மாட்டோம் என ரிஹானாவின் ட்விட்டிற்கு கங்கனா பதில் அளித்துள்ளார்.

Tags : Rihanna ,border ,American ,Indian ,Delhi , Delhi frontier, struggle, farmer, singer Rihanna, support
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது