வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இலை கட்சியை தன் கைக்குள் வைத்திருக்கும் வீரமானவர் மீது கட்சிக்குள்ளேயே ஏக அதிருப்தியாம். இவரால் கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். பதவி கிடைக்காதவர்கள். குக்கரில் இருந்து இலைக்கு தாவியவர்கள் என ஒரு பட்டியலே நீளுமாம். சிறைப்பறவை விடுதலைக்கு பிறகு அதிருப்தி கோஷ்டியினர் வேலி தாண்ட தயாராகிட்டாங்களாம். அதிலேயும் வேலூர் மாவட்டத்தில் ‘முக்கிய’ பொறுப்புக்கு வலைவீசியவர்கள் இந்த வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்களாம். அவர்கள் சோளிங்கர், குடியாத்தம் அம்மணியிடமும் ஆட்களிடமும் ரகசிய தொடர்பில் இருக்கிறாங்களாம்.
இந்த தகவல் உளவுத்துறை மூலம் இணைக்கும், துணைக்கும் போக, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வேலூரில் போஸ்டர்கள் மூலம் ஆரம்பம் முதல் சிறைப்பறவையின் புராணம் பாடி வந்த ரியல் எஸ்டேட் நடத்தி வந்த ஒருவர், சிறைப்பறவை அம்மா வந்தால் இலைக்கட்சிக்கு நான்தான் மாவட்ட செயலாளர் என்று இப்போதே பரபரத்து வருவதுதான் வேடிக்கை. உணவு கிடைக்காவிட்டால் ஆடுகளே வேலி தாண்டும்போது... கட்சியில் பதவி, எம்எல்ஏ சீட் கிடைக்காவிட்டால் நாங்கள் கட்சி தாவுவது எப்படி தப்பு என்று சொல்றீங்க என்று கேட்கிறார்கள் அதிருப்தியாளர்கள்.