×

நமச்சிவாயத்தை மறந்து நாராயணா கோஷம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜவில் இணைந்தார். அவருடன் ஆளுங்கட்சி எம்எல்ஏவான ஊசுடு தீப்பாய்ந்தனும் பாஜவில் ஐக்கியமானார். அவரைத் தொடர்ந்து மேலும் சில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு பாஜ வலைவிரித்துள்ளதாகவும், ஜே.பி. நட்டா புதுச்சேரி வருகையின்போது அவர்கள் அக்கட்சியில் ஐக்கியமாவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன. ஆனால் நட்டா புதுச்சேரிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிகழ்வின்போது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பிற கட்சிகளிலிருந்து எம்எல்ஏக்கள், விஐபிக்கள் யாரும் இணையவில்லை.

நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து விலகியதையடுத்து உஷாரான காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநில தலைமையானது அதிருப்தியில் இருந்த எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சில வாக்குறுதிகளை எம்எல்ஏக்களுக்கு  காங்கிரஸ் அளித்ததால், மற்ற எம்எல்ஏக்கள் கட்சித் தாவும் நடவடிக்கையை நிறுத்தி விட்டதாக தகவல்கள் பரவுகின்றன. இதன்மூலம் தற்போதைக்கு காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொண்டாலும் தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டு கூட்டணி உறுதியானதும் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தொகுதி வாரியாக நமச்சிவாயம் தனது ஆதரவாளர்கள் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வலைவிரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், சிலர் அவருடன் வர சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. இதனால் அடுத்தகட்ட நெருக்கடிக்குள்ளான காங்கிரஸ், நமச்சிவாயத்தின் இச்செயலுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில் நாராயணசாமி தரப்பு இறங்கியுள்ளது. நமசிவாயத்தை மறந்து நாராயணனுடன் இருந்தால் எல்லாம் நன்மையே கிடைக்கும் என்று பஞ்ச் டயலாக் அடிக்கின்றனர் கதர் தரப்பினர்.

Tags : Narayana ,Namasivayam , Narayana slogan forgetting Namasivayam
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்