சென்னைப் புறநகர் பகுதியை ஒட்டிய சட்டமன்ற தொகுதியான திருப்போரூரை தற்போது பலரும் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர். குறிப்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகின்ற தேர்தலில் தனக்கு ஆவடியில் டெபாசிட் கிடைத்தாலே பெரிது என்ற நிலை. காரணம் சமீபத்தில் அவருக்கு எதிராக கட்சி தலைமையகத்தில் திரண்டவர்கள்... கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலை எழுந்துள்ளதாம். இதனால தான் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஆவடியில் இருந்து சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தென்முனையில் இருக்கும் திருப்போரூரரை கேட்டு வாங்கிக் கொண்டதாக ஆவடியிலும் திருப்போரூரிலும் தொண்டர்களிடம் ஒரே பேச்சாக உள்ளது.
ஏதாவது ஒரு ஆலோசனைக் கூட்டம் என்று கூறிக்கொண்டு திருப்போரூர் தொகுதியில் வாரத்துக்கு இருமுறை வலம் வந்து முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். வருகின்ற தேர்தலில் நான் திருப்போரூர் தொகுதியில்தான் நிற்கப் போகிறேன், உங்களுக்கு என்ன தேவை என்பதை இப்போதே சொல்லுங்கள் என்று கேட்டு சந்தோஷத்தில் திளைக்க வைக்கிறாராம். இதனால், ஏற்கெனவே இங்கு தனக்குத்தான் சீட் என்று நினைத்துக் கொண்டிருந்த முன்னாள்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர். இப்போதே தொகுதியில் தன் சமூகத்தை சேர்ந்தவர்களை வளைத்துப் போடும் முயற்சியில் இறங்கிய அமைச்சர் வைட்டமின் ‘ப’ வையும் களத்தில் இறக்கிவிட்டாராம்.