×

கொரோனா தடுப்பூசி செலுத்த 195 மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அனுமதி

சென்னை: தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உட்பட 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி மையங்களை விரிவுபடுத்தும் நோக்கத்தில், தமிழகத்தில் உள்ள முன்னணி 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில், 34 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் 1.12 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். நாளுக்கு நாள், தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே, அனைத்து தரப்பினருக்கும் சிரமம் ஏற்படாத வகையில், அரசு மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 15 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.

Tags : Health department ,hospitals , The Department of Health approved 195 hospitals to administer the corona vaccine
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...