தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தற்ேபாது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் படங்கள் வெளியிடப்பட்டாலும் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் புதிய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தியேட்டரில் வெளிவந்த படத்தை ஓடிடியில் வெளியிடுவது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டாலும் நாளை வரை (பிப்.4) தியேட்டரில் திரையிடலாம்.
அதன்பிறகும் திரையிட விரும்புகிறவர்கள் அந்தந்த பகுதி விநியோகஸ்தர்களுடன் பேசி புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். கபடதாரி 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்திருக்கிறார். இனி சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜெட் படங்கள் 50 நாட்களுக்கு பிறகும் மட்டுமே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம்.