×

பூந்தமல்லி அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மணம்பேடு ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கராஜ் என்பவரை தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த 14.10.2016 அன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மேலும், அவரது தம்பி வெங்கட்ராமன்(47) என்பவரை கடந்த 26.9.2018 அன்று காலை, கார் மற்றும் இரு பைக்குகளில் வந்த கும்பல், கத்தி, அரிவாள் மற்றும் உருட்டு கட்டைகளுடன் அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்நிலையில், தங்கராஜின் மைத்துனரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளருமான கருணாகரன்(45). நேற்று மாலை வௌ்ளவேடு பாலத்தின் அருகே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக கார் மற்றும் பைக்குகளில் வந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

புகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : DMK ,death ,gang ,Poonamallee , Poonamallee, DMK official, killed
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி