×

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கடும் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி கூடியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்த உரையை காங்கிரஸ் உட்பட 20 கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மாநிலங்களவை நேற்று காலை கூடியது.

அவை கூடியவுடன் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் எதிர்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு அவர், ‘ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது உறுப்பினர்கள் இந்த விவாகரம் குறித்து பேசலாம்’ என்றார். ஆனால் இதை ஏற்க மறுத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து அவை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் துணை தலைவர் ஹரிவன்ஸ் உறுப்பினர்கள் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். ஆனால் உறுப்பினர்களின் அமளி, கூச்சல் குழப்பம் நீடித்ததால் 11.30 மணி வரை அவையை அவர் ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மூன்றாவது முறை கூடியபோது தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மக்களவையிலும் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் விவகாரத்தை உறுப்பினர்கள் எழுப்பினார்கள். மாலை 4 மணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அவை கூடியது.  காங்கிரஸ், திமுக மற்றும் இதர எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியவுடன் காங்கிரஸ் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளி செய்தனர். இதனால் 7 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் சட்டம் குறித்து விவாதிக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் கூறி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை

திமுக எம்பி திருச்சி சிவா நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘வேளாண் சட்டம் குறித்து விவாதம் நடக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக உட்பட எதிர்கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்து விட்டனர். குறிப்பாக அங்கு ஜனநாயகம் என்பதே கிடையாது. வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகளில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தான் இதுகுறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வருவோம். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் குரல் எழுப்பினால் அது இருட்டடிப்பு செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தொலைக்காட்சி சேனலில் கூட ஆளுங்கட்சியினர் பேசினால் மட்டுமே காட்டப்படுகிறது. மற்றவை அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. எதிர்கட்சியினர் தங்களது பிரச்னைகள் குறித்து பேசும்போது ஒலி பெருக்கி இணைப்பு காரணமே இல்லாமல் துண்டிக்கப்பட்டு உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது’’ என்றார்.

நாடு முழுக்க மதமாற்ற தடை சட்டம்?
* வேளாண் சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் பலியான விவசாயிகள் குடும்பத்திற்கு எந்த நிவாரண நிதி உதவியும் வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை என மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
* நாடு முழுவதற்குமான தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) கொண்டு வருவதில் எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
* உபி உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் திருமணத்திற்காக கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாடு முழுவதற்கும் கொண்டு வர திட்டமிடவில்லை என்றும், இது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி மக்களவையில் கூறி உள்ளார்.
* குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால், வேறு வழியில்லாமல் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர் என உள்துறை அமைச்சம் மக்களவையில் பதிலளித்துள்ளது.

Tags : Parliament , Agricultural law, repeal, austerity, adjournment
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...