டெல்லி : பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுகிறார். உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்.2021 பிப்ரவரி 4ம் தேதி முதல் 2022 பிப்ரவரி 4 வரை, உத்திரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து 75 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாங்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சவுரி சவுரா சம்பவம்
அப்போதைய ஆங்கிலேய அரசு இந்தியாவில் ஆட்சி செய்து பல சட்டங்களை இயற்றியது. அவற்றில் ரவுலட் சட்டமும் ஒன்று.இந்தியர்களை நசுக்கும் அதிகாரம் படைத்த இச்சட்டத்திற்கு எதிராக கடந்த 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ந்தேதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமைதி வழியில், வன்முறையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா பகுதியில் நடந்த இந்த ஒத்துழையாமை இயக்கத்தில், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டக்காரர்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலியானதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அதற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 23 போலீசார் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலால் ஆங்கிலேய அரசாட்சியின் அடித்தளம் அசைந்தது. சுதந்திர போராட்ட எழுச்சிக்கு இந்த சம்பவம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இதன்பின் 228 இந்தியர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களில் 172 பேர் பிரிட்டிஷாரால் தூக்கில் போடப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்து 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்தது.