வில்லியனூர்: புதுச்சேரியில் இந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தாமரைகுளம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.43 லட்சம் செலவில் தூர்வாரி பக்கவாட்டில் கற்கள் புதைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் தார்சாலை அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்தாண்டு பெய்த கனமழையில் தண்ணீர் நிரம்பி தாமரைக்குளம் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனால் பொதுமக்கள் குளத்தை சுற்றியுள்ள சாலையில் நடைபயிற்சி சென்று வருகின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகள் அங்கு ஓடி விளையாடி வருகின்றனர். இதனால் அவ்வபோது சிறுவர்கள் குளத்தில் தவறி விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் பைக்கில் எதிரெதிரே வரும்போது தடுப்பு கட்டை இல்லாததால் குளத்தில் விழுகின்றனர். ஆகையால், ஏதேனும் விபத்து ஏற்படும் முன் குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.