நீடாமங்கலம்: போக்குவரத்து நிறைந்த நீடாமங்கலம் மன்னார்குடி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலத்திலிருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், சென்னை வரை சென்று வருகின்றன. இதனால் நீடாமங்கலம் - மன்னார்குடி நெடுஞ்சாலை போக்குவரத்து நிறைந்து காணப்படும்.
இந்நிலையில் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ரொக்ககுத்தகை பகுதியில், ரொக்ககுத்தகைக்கும்-புதுப்பாலத்திற்கும் இடையே சாலையில் பிளவு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் தார் டின்களை வைத்து சாலை பழுதை அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சாலை பள்ளத்தால் வாகனங்கள் எதிர்எதிரே வரும் போது விபத்து நேரிட அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த சாலைப்பள்ளத்தை உடனடியாக சீர் செய்திட நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.