உடுமலை: சின்னகுமாரபாளையம் ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளி கடத்தி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.உடுமலை அருகே உள்ள சின்னகுமாரபாளையத்தில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி தெற்கு பகுதியில் ஓடை செல்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஓடையில் மர்ம நபர்கள், ஜேசிபி மூலம் மணலை தோண்டி டிராக்டரில் கடத்தி வருகின்றனர். இந்த மணலை தோட்டத்தில் குவித்து வைத்து, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்பி கனிம வளம் கொள்ளை போவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:இந்த பகுதி மழை குறைவான பகுதியாகும். ஏற்கனவே, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மணல் அள்ளுவதால் நீர் தேங்குவது பாதிக்கப்படும். இதுபற்றி காவல்துறையில் புகார் அளித்தாலும், அமராவதி, தளி காவல்நிலைய எல்லைப்பகுதியில் வருவதால், போலீசார் எல்லை பிரச்னை காரணமாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஏராளமான டிராக்டரில் மணல் அள்ளி செல்கின்றனர். அதிகாரிகள் இதை கண்காணித்து தடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.