கொழும்பு: இலங்கையி்ல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெளிநாடுகளுடன் இணைந்து கிழக்கு சரக்கு முனையத்தை மேம்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், 100 சதவீதம் இலங்கை அரசின் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக உள்ள தொழிற்சங்கங்களின் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
கிழக்கு சரக்கு முனைய பணிகள் தொடர்பாக பிரதமர் ராஜபக்சே நேற்று தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிழக்கு சரக்கு முனையத்தின் மேம்பாடு பணிகள் முழுவதும் அரசின் துறைமுக நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவுக்கு இத்திட்டம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே, சீனாவின் தூண்டுதலின் பேரில் தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.