×

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை வீச்சு :பொன்னேரி அருகே பரபரப்பு

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நெடுஞ்சாலையில் உள்ள திருவெங்கடபுரம் அருகே சாலையோர கழிவுநீர் கால்வாயில் நேற்று அதிகாலை ஒரு பச்சியம் பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தடபெரும்பாக்கம் ஊராட்சி தலைவர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா,  வார்டு உறுப்பினர்கள் பாலாஜி, லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அக்குழந்தையை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று  மருத்துவரிடம் ஒப்படைத்தனர்.  

அங்கு குழந்தைக்குக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  குழந்தை பெற்று மருத்துவமனை வார்டில் இருந்த பெண் ஒருவர் இந்த குழந்தைக்கு பால் கொடுத்ததோடு, அவரது குழந்தைக்கு உள்ள துணியையும் அணிவித்தார். பின்னர், நேற்று போலியோ சொட்டு மருந்து தினம் என்பதால் மருத்துவமனை வளாகத்தில் நடந்த முகாமில் அக்குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்நிலையில், பொன்னேரி காவல் நிலையத்துக்கு  தகவல் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், திருவள்ளுரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இக்குழந்தை குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, கள்ளக்காதலில் குழந்தை பிறந்ததால் குழந்தையை வீசிச் சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : sewer canal ,Ponneri , பச்சிளம் குழந்தை
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்