×

ஜி.எஸ்.டி. வரி இதுவரை இல்லாத அளவுக்கு வசூல்!: 4 மாதங்களில் ரூ.1.20 லட்சம் கோடியை எட்டியது..!!

டெல்லி: ஜி.எஸ்.டி. வரி வசூல் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஜனவரி மாதம் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன இந்திய பொருளாதாரம் தற்போது படிப்படியாக கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிப்பால் வேகமெடுத்து வருவது ஜி.எஸ்.டி வசூலில் எதிரொலித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இன்னும் பல நிறுவனங்கள் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால் ஜி.எஸ்.டி. வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை 6 மணி வரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் அதிகம் நபர்கள் வரிதாக்கல் செய்யவிருப்பதால் இந்த தொகை மேலும் அதிகாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகமாகும். கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த மாதம் தான் இவ்வளவு அதிக தொகை வந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். ஜி.எஸ்.டி. அதிகரித்து வருவதால் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : G.S.T. , G.S.T. Tax, 4 months, reached Rs 1.20 lakh crore
× RELATED ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தினால்...