×

ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது : திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்

சென்னை : தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தை ஏற்றி உதவி காவல்ஆய்வாளரை கொன்ற சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலு. இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது முருகவேல் என்பவர் குடித்துவிட்டு சுற்றி திரிந்ததை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், அங்கிருந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பைக்கில் சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. பாலு மீது மோதியுள்ளார். இதில் பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி, மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார்.போதையில் சுற்றிய முருகவேல் என்ற நபரை எஸ்.ஐ. கண்டித்ததால், ஆத்திரமடைந்த முருகவேல் எஸ்.ஐ. பாலு மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!” என்றார்.

Tags : Tamil Nadu ,Kanimozhi ,police officer ,DMK , DMK MP Kanimozhi, obsession
× RELATED தென் சென்னை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம்..!!