தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போதே கட்சியினர் வாக்கு சேகரிப்பிற்கென விளம்பரப்படுத்த சுவர்கள், பேனர் கட்டும் பகுதிகள் என இடம் பிடிப்பதில் கூடுதல் அக்கறை காட்டி வருகின்றனர். 1959ம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளி விளம்பரச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டிடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அவரது அனுமதியில்லாமல் கொடி, பேனர் கட்டுதல், பேனர் வைத்தல், பிரசுரங்கள் ஒட்டுதல், வாசகங்கள் எழுதுவது போன்றவற்றிற்கும் தடை இருக்கிறது. ஆனாலும் இந்த சட்டங்களை எல்லாம் தூரப்போட்டு விட்டு, ஆளும்கட்சியினர் தடாலடியாக சுவர் விளம்பரங்கள் எழுதவும், போஸ்டர் ஒட்டவும் இப்போதே இடங்களை ‘ரிசர்வ்’ செய்ய துவங்கி விட்டனர். புகார் தெரிவித்து வழக்குப்போட வழி இருந்தும், ஆளும்கட்சியினர் மீதான அச்சத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கட்டிட உரிமையாளர்கள் வாய்பேச வழியின்றி பரிதவித்து வருகின்றனர்.