புதுடெல்லி: திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதித்தது. ஆனால் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திரையரங்குகளில் இன்று முதல் 100% இருக்கைகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும், டிக்கெட் பதிவின் போது மொபைல் எண்கள் பெறப்பட வேண்டும், திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பிற்கு பிபிஇ உடைகள் தரப்பட வேண்டும், ஒவ்வொரு ஷோ முடிவிலும் திரையரங்குகளில் உணவு மிச்சங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் திரையங்குகளை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.