நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 4 பொதுத்தொகுதியும், ராசிபுரம், சேந்தமங்கலம் என இரண்டு தனித்தொகுதியும் இருக்கிறது. இதில், பரமத்திவேலூர் திமுக வசமும், மற்ற 5 தொகுதி அதிமுக வசமும் இருக்கிறது. கடந்த 15 ஆண்டாக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, குமாரபாளையம் தொகுதியில் 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 4 வது முறையாக அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
அதே நேரத்தில் மாவட்டத்தில் மற்றொரு அமைச்சரான சரோஜா போட்டியிட ஆயத்தமாகி வரும் ராசிபுரம் (தனி) தொகுதியில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறாராம். இதனால், இந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கவேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 96ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, ஜெயலலிதாவே தேர்தலில் தோல்வி அடைந்தார். தமிழகம் முழுவதும் 4 தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றது. அதில் ராசிபுரம் ஒன்று. அப்போது இங்கு வெற்றி பெற்றவர் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம். இத்தொகுதியை அதிமுக பாஜகவுக்கு விட்டு கொடுக்க கூடாது என்று அமைச்சர் தரப்பில் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கிறது.