×

ஆற்காட்டில் பைக் ரேஸ் ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆற்காடு: ஆற்காட்டில் மின்னல் வேகத்தில் பைக்குகளை ஓட்டிச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் பைக் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் பெரிய  நகரமான ஆற்காடு வந்து செல்கின்றனர். அதேபோல் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், துணை கருவூலம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், நீதிமன்றம் மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

மேலும் ஆன்மீக நகரமான ஆற்காட்டில் உள்ள  பிரசித்தி பெற்ற  கங்காதர ஈஸ்வரர் கோயில், வரதராஜபெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு  பக்தர்கள் அதிக அளவு வந்து செல்கின்றனர். இதனால் ஆற்காடு அண்ணாசாலை, வேலூர் மெயின் ரோடு, பஜார் வீதி, கலவை சாலை, ஆரணி சாலை உட்பட அனைத்து சாலைகளிலும் பகல் நேரங்களில் அதிகளவு பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. மேலும் ஆற்காடு வேலூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தங்களது ஊர்களிலிருந்து பேருந்துகளில் வரும் மாணவ, மாணவிகள் அண்ணாசிலை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிகளுக்கு நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பைக் ஓட்டிச் செல்லும் ஆசாமிகள் அதிகளவு வேகத்தோடு செல்கின்றனர். மேலும் பள்ளிகளுக்கு அருகில் பைக்கை வேகமாக யூடர்ன் அடித்து நிறுத்துவது போல் மாணவ, மாணவிகளை பயமுறுத்துகின்றனர். வேகமாக செல்லும் பைக் வாலிபர்களால் சாலை விதிகளை மதித்து செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். மேலும் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி அடிபடும் நிலையும் ஏற்படுகிறது.
இதனால்  அச்சத்தோடு செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்கும் போது ஆபாசமாக பேசி தாக்கும் அவலநிலையும் ஏற்படுகிறது.

மேலும் நாய் குரைப்பது போல், குழந்தை அழுவது போல்  பல்வேறு விதமான  சத்தத்துடன் ஹாரன்களை அடித்தபடி பைக்கில் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகளின் கவனம்  சிதறி விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்களையும், மாணவ, மாணவிகளையும் அச்சுறுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் செல்லும் பைக் ஆசாமிகள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bike racers ,Arcot , Public Fear by Bike Race Assamese in Arcot: Demand for Action
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...