×

திருமண ஆசை கூறி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோவில் கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7வது தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மா (52). இவரது பேத்தி சீதா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள், பாண்டியம்மா பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு சீதா வீட்டிலிருந்து வெளியே சென்றவள் வீடு திரும்பவில்லை.   இதனையடுத்து, அவளை பாண்டியம்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருந்த போதிலும் அவளை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டியம்மா திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர். இதற்கிடையில், பாண்டியம்மா பேத்தி சீதாவை கண்டுபிடித்து தருமாறு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி சீதாவை கண்டுபிடித்து தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷாம் வின்சென்ட் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக சீதாவை தேடிவந்தனர். அப்போது, அவளை அம்பத்தூர், புதூரை சேர்ந்த சதீஷ் (18) என்ற தனியார் கம்பெனி ஊழியர் திருமண ஆசைகாட்டி கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த சீதா, சதீஷ் இருவரையும் நேற்று கண்டுபிடித்தனர். பின்னர், போலீசார் விசாரணையில், சீதாவை, சதீஷ் திருமண ஆசைகாட்டி கடத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார்  போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்து சதீசை கைது செய்தனர். மேலும், சீதாவை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு, சீதாவை திருவள்ளூர் மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags : Student ,Valipar , Student abducted and raped for want of marriage: Valipar arrested in Pokcho
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...