பழநி: இந்திய கிரிக்கெட் அணி வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் பழநியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில், இடதுகை வேகப் பந்துவீச்சாளரான சேலம், சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் அறிமுகமாகி முத்திரை பதித்தார். ‘யார்க்கர் கிங்’ ஆக இந்த ஒரே டூரில் அவரது புகழ் உச்சத்துக்கு சென்றது. நாடு திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த நடராஜன், அடிவாரத்தில் உள்ள முடிக்கொட்டகையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர், ரோப்கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தகவலறிந்ததும் ஏராளமானோர் அவரைக் காண குவிந்ததுடன் செல்பி எடுத்து கொள்ள முட்டி மோதியதால், ரோப்கார் நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாமல் திணறினார். பின்னர் நடராஜனை அவரது நண்பர்கள் பாதுகாப்பாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.