முக்கிய அமைப்புகள்
* ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்
* பொதுமக்கள் சேவை அறை
* அவசர கால மையம்
* புதிய கண்டுபிடிப்பு மையம்
சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சர்வதேச அளவில், நவீன வசதியுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் ₹40 கோடி மதிப்பீட்டில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைய உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 1000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதை தவிர்த்து, திட்ட பணிகள் மற்றும் வசதிகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ₹150 கோடி செலவில் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. கேரள அரசு நிறுவனமான கேரளா ஸ்டேட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சென்னையின் நிலையான, ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான மாற்றங்களை, மக்கள் பங்களிப்போடும் அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றுவதே இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மையம் வெவ்வேறு துறைகளிடமிருந்து பல்வேறு விவரங்களை சேகரித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முக்கிய திட்டங்கள் மற்றும் பணியை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்படும் ரிப்பன் மாளிகை வளாகத்தில் 50 ஆயிரம் சதுர அடியில் தரைதளம் மற்றும் நான்கு மாடிகளுடன் நவீன கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது வாகன நிறுத்தமாக பயன்படுத்தபட்டு வரும் ரிப்பன் மாளிகைக்கு பின்புறம் உள்ள இடத்தில் இந்த மையம் அமையுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தபட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான கட்டுப்பாட்டு மையம் தனியாக அமைக்கப்படவுள்ளது. இந்த மையம் சர்வதேச அளவில், அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது.
இதன் வடிவம், உட்புற வடிவமைப்பு, வெளிப்புற வடிமைப்பு, பசுமைக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தின் மேற்பகுதியில் முழுவதும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்திற்கு தேவையான மின்சாரம் முழுவதும் இதன் மூலம் பெறும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை மையமும், ஸ்மார்ட் கவர்மென்ஸ் மையமும் அமைய உள்ளது. நான்கு தளங்களுடன் அமையும் இந்த மையம் ரிப்பன் மாளிகை, அம்மா மாளிகை ஆகியவற்றை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரிப்பன் மாளிகையின் பிரதிபலிப்பு
இந்த புதிய கட்டிடத்தின் புதிய வடிமைப்பு ரிப்பன் மாளிகையின் ேதாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் முகப்பு பகுதி ரிப்பன் மாளிகை போல் அமைக்கப்படுகிறது.