×

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 மாத கர்ப்பிணி மூச்சு திணறலால் பலி: உறவினர்கள் பரபரப்பு புகார்

ஆவடி: தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனைக்கு வந்து சென்ற 8 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறல் ஏற்பட்டு  இறந்தார். ஆவடி, காமராஜர் நகர், 3வது தெரு சேர்ந்தவர் தமிழ்மணி (30).  தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வைஷாலி (25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. தற்போது வைஷாலி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சோழம்பேடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கர்ப்பமான 3வது மாதத்தில் இருந்து வைஷாலி தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வைஷாலி, தனது தாய் சரளாவுடன் அந்த மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து, ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதன்பிறகு, வைஷாலியை அழைத்து கொண்டு மருத்துவமனை ஊழியர்கள் ஸ்கேன் அறைக்கு சென்றனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

தகவலறிந்து, திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். வைஷாலிக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால் திருவள்ளூர் ஆர்டிஓ பிரீத்தி பார்கவி மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரிக்கிறார். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து 6 மாதமாக கர்ப்பிணி வைஷாலி பரிசோதனை செய்து வந்தார். வைஷாலியின் முழு உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததற்கு தனியார் மருத்துவமனை டாக்டர்களே காரணம். எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : suffocation ,Relatives ,hospital , Private hospital, treatment, pregnant breathing, kills
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...