×

உருமாற்ற கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க ஒரே சிறந்த வழி விரைவாக தடுப்பூசி போடுங்கள்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: ‘உருமாறும் கொரோனா வைரஸ் இன்னும் மோசமான அபாயகரமான மாற்றம் பெறுவதை தடுக்க சிறந்த வழி, விரைவில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே’ என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். கடந்த சில மாதங்களாக உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கி விட்டது. கொரோனா தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர். 2021ம் ஆண்டு கொரோனாவுக்கு முடிவு கட்டும் ஆண்டாக இருக்கும் என பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால், கொரோனா ஓய்ந்து விடவில்லை. சொல்லப் போனால், அது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து, தற்போது வீரிய வகை கொரோனாவாக உருமாற ஆரம்பித்துள்ளது என அதிர்ச்சி அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறும் தன்மை கொண்டதாகும். இது, ஏற்கனவே நூற்றுக்கணக்கான உருமாற்றங்களை அடைந்திருந்தாலும், தற்போது தென்ஆப்ரிக்கா, பிரேசில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றங்கள் புதிய அபாயங்களாக உள்ளன. இந்த 3 புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ்கள் தீவிரமாக பரவும் தன்மை கொண்டவை. தென் ஆப்ரிக்காவில் பரவிய 501.ஒய்.வி2 எனப்படும் கொரோனா வைரஸ் மட்டுமே 21 உருமாற்றத்தை கண்டுள்ளது.

இதில் இங்கிலாந்தில் பரவும் 501.ஒய்.வி1 வகை உருமாற்ற கொரோனா மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பெரிய அளவில் உருமாற்றம் எதையும் பெறவில்லை. அதனால், ஆராய்ச்சியாளர்களால் இரட்டிப்பு வேகத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், திடீரென 2020ம் ஆண்டு இறுதியில் இப்படி வீரியமிக்க உருமாற்ற கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி இருக்கிறது. வேகமாக பரவும் மூன்று வகைகளும், புதிய கொரோனா வைரஸ்களும் பொதுவான உருமாற்றத்தைக் கொண்டுள்ளன. அவை மனித உயிரணுக்களுடன் வலுவாக இணைகின்றன. மேலும், ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகள் அவற்றை அடையாளம் காண்பதை கடினமாக்குகிறது. இந்த உருமாற்றம் இதே வேகத்தில் தொடர்ந்தால், கடந்த பிப்ரவரியில் இருந்த அதே நிலைக்கு மீண்டும் நாம் தள்ளப்படுவோம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் மிக வேகமாக பரவும் வாய்ப்புகள் உள்ளன. இது மட்டுமின்றி, காலப்போக்கில் இது அபாயகரமான வைரசாக உருமாறும் அபாயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள். தற்போது உருமாறியுள்ள 3 புதிய கொரோனா வைரஸ்களும் வேகமாக பரவத் தொடங்கும் பட்சத்தில், மிக விரைவில் நாம் இன்னும் வீரியமிக்க வைரசை எதிர்த்து போராட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுவோம். தற்போது, ஒரு கொரோனா வைரசை எதிர்கொள்ளும் அளவுக்கே நமது உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே, உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ்களின் பரவலை கட்டுப்படுத்த வேண்டும், அது தாக்கினால் தாங்க வேண்டும் என்றால், அது தடுப்பூசியால் மட்டுமே சாத்தியமாகும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் காரணமாகவே அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடப்படுவது அவசியமாகிறது என்கின்றனர். தடுப்பூசி போடுவதன் மூலம் பரவல் வேகத்தை கட்டுப்படுத்த முடியும், அதன் மூலம் உருமாற்றத்தை தடுக்க முடியும். பரவல் சங்கிலி தொடரை தடுப்பதன் மூலம் அபாயகர உருமாற்றத்தை தவிர்க்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதற்கு ஒரே வழி அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.


தாமதம் செய்வது பெரிய விபரீதம்

ஒருமுறை கொரோனா பாதிப்பு வந்ததும் நம் உடலில் அடுத்த 6 மாதத்திற்கு நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். அதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவாது. ஆனால், புதிய வகை உருமாற்ற கொரோனா அந்த நோயெதிர்ப்பு சக்தியை காலி செய்திடும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், அடுத்தடுத்த உருமாற்றங்கள் நாம் கற்பனை செய்வதைக் காட்டிலும் மிக ஆபத்தானவையாக கூட இருக்கலாம் என்கின்றனர். இந்த அபாயகரமான வைரஸ் 50% அதிக பரவலை ஏற்படுத்துவது போல இறப்பையும் 50% அளவுக்கு அதிகரிக்காதாம். அதன் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகமாக கூட இருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே, தடுப்பூசி போடுவதில் செய்யும் தாமதத்திற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.



Tags : researchers , Transformation corona, virus, vaccine, researchers, warning
× RELATED லண்டனில் ஆழ்கடலில்...