சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலையான சசிகலாவுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுப்ரமணிய ராஜா என்பவர் வரவேற்பு பேனர் வைத்திருந்தார். அவரை அதிமுகவில் இருந்து இபிஎஸ், ஓபிஎஸ் கடந்த 27ம் தேதி நீக்கினர்.இந்நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினருமான புலியூர் இரா.அண்ணாதுரை சசிகலாவுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் பேனர் வைத்திருந்தார். இதையடுத்து அவரும் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த புலியூர் இரா.அண்ணாதுரை (அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதி, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவின் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.