தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த மீனவர் சுடர்மணி, கடந்த அக்டோபர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது, சக மீனவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது அண்ணன் நாராயணன் (37), தனது தம்பியை கொன்றவர்களை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்வேன் என சபதம் ஏற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, கொலையாளிகளை பீர் பாட்டிலால் அடித்த வழக்கில் நாராயணன் சிறைக்கு சென்றார். பின்னர், 3 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவர், நேற்று காலை காசிமேடு பழைய மீன்பிடி ஏலக்கூடம் அருகே அமர்ந்து இருந்தபோது, அங்கு வந்த 4 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதனிடையே, ராயபுரம் காவல் உதவி ஆணையர் தினகரன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு அரிவாள், செல்போன் இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனிப்படை அமைத்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.