சென்னை: சென்னை மாநகராட்சி உதவி தலைமையாசிரியருக்கு, கொரோனா தொற்று பீதியை தொடர்ந்து, 52 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பத்தாம் வகுப்பு படிக்கும், 52 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி பள்ளி உதவி தலைமையாசிரியருக்கு, முதற்கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்ததாக கூறப்பட்டது. தனியார் ஆய்வக பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை, சாதாரண சளி, இருமலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு 52 மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை. எனவே, வழக்கம் போல் பள்ளி செயல்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.