சென்னை: மகாத்மா காந்தி நினைவுதினம் இன்று (30ம் தேதி) அனுசரிக்கப்படுவதை யொட்டி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், “தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை கடைபிடிக்க மாட்டேன் என்றும், சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது என் கடமை” என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.