ஊட்டி : தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்று நடவு பணிகள் துவங்கியது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவித்து மகிழ வருகின்றனர். இது போன்று நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு ேதாறும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு, அதில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். ஏப்ரல் மற்றும் ேம மாதங்களில் இந்த செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.
இதுமட்டுமின்றி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. குன்னூரில் பழக் கண்காட்சியும், கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியின் போது பல லட்சம் மலர்களை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். கோடை விடுமுறையின் போது வரும் சுற்றுலா பயணிகள் இந்த கண்காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இது ஒரு புறம் இருக்க ஊட்டியில் உள்ள மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்காவும் கோடை சீசனுக்காக தயார் செய்வது வழக்கம். இப்பூங்காக்களில் விழாக்கள் ஏதும் நடத்தவில்லை என்ற போதிலும் பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்வது வழக்கம்.
அதில், பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் செடிகள் நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நடவு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. மலர் செடிகள் வளரும் காலத்தை பொருத்து அடுத்த மாதம் வரை நடைபெறும். ஏப்ரல் மாதம் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து விடும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.