கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே எருக்கூர் தெற்கு தோப்பு தெருவில் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் தெற்கு தோப்பு தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் தேங்கியுள்ள மழைநீர் வெளியே செல்வதற்கு வடிகால் வசதியின்றி உள்ளது. 4 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எருக்கூர் தெற்குதோப்பு தெருவில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேறி செல்லும் வகையில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி தரவில்லை. எனவே அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை தற்காலிகமாக வடிய வைக்கவும், வருங்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் நிரந்தரமான வடிகால் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.