×

மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம் : கொரோனா தடுப்பூசிகளுக்கு தடைக் கோரிய வழக்கில் நீதிபதி கருத்து

மதுரை : மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை விரும்பாவிட்டால் போட்டுக்கொள்ள வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு தடுப்பு செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேற்கூரிய 2 தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அதுமட்டு மல்லாமல், அரசு அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடிக்கும் ஒரு சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தடுப்பூசிகள் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது என இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் அறிவித்தும், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடைக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து, நிபுணர்குழு அமைத்து அவசரகால அடிப்படையில் அனுமதி தந்துள்ள சூழலில் எதன் அடிப்படையில் தடை கேட்கிறீர்கள் என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக கூறியதால் தடுப்பூசிகளுக்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Petitioner ,Judge , Vaccine, Corona, Prohibition, Judge, Comment
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...