கோவில்பட்டி : கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், கும்ப பூஜை, சண்முகர் வழிபாடு நடந்தது. காலை 10.30 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி தெய்வானை, கார்த்திகை சுப்பிரமணியருக்கும் பால், தேன், பன்னீர், குங்குமம், சந்தனம், இளநீர் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜைகளை ஹரிஹரபட்டர், சுப்பிரமணியபட்டர், அரவிந்த்பட்டர் நடத்தினர்.
கோயில் செயல்அலுவலர் பூவலிங்கம், கட்டளைதாரர் காளிராஜ், நாகஜோதி குடும்பத்தினர் உட்பட திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு அடிவார விநாயகர் கோயிலில் இருந்து மலையை சுற்றி கிரிவலமும், 6 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில், வீரவாஞ்சிநகர் புற்றுக்கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.