வி.கே.புரம் : அகஸ்தியர் அருவி அருகே உள்ள கல்யாணதீர்த்தம் அருவி உள்ள பகுதியிலுள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயம் கடந்த சில நாட்களுக்குமுன் பெய்த மழையினால் ஏற்பட்ட தொடர் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் பாபநாசம் அணை நிரம்பியது. அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் அகஸ்தியர் அருவியிலும், கலயாண தீர்த்தத்திலும் தொடர்ந்து பல நாட்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கல்யாண தீர்த்தம் அருகிலிருந்த கோடிலிங்கேஸ்வரர் கோயிலின் சுற்றுச்சுவர் ஒருபகுதி இடிந்து சேதமடைந்துள்ளது. அதேபோல் கோயிலின் முன்பகுதியில் இருந்த லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் சிலைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன. பக்தர்கள் கோயிலுக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளன.
கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று ஏராளனமானவர்கள் கலந்து கொண்டு பூஜை செய்வர். சித்தர்கள் இரவு நேரங்களில் சுவாமி தரிசனம் செய்யும் இடமாக இது கருதப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயிலில் உடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்றும் உலோபாமுத்ரா சமேத அகஸ்தியர் சிலைகளை மீண்டும் வைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள்
வேண்டுகின்றனர்.