சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடுங்குளிரில் இரண்டு மாதம் காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான நேற்று தலைநகர் டெல்லியில் டிராக்டர்கள் பேரணி நடத்தினர். இதில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒரு விவசாயி பலியானார். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட போலீசார் தாக்குதலை கண்டித்தும், விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.சென்னைஅண்ணாசாலையில் நடைபெற்ற பேரணிக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, முகமது ரஷீத், சலீம், பொதுச்செயலாளர்கள் எஸ்.வி.ராஜா, புஸ்பராஜ் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.