வெள்ளகோவில்: முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வையொட்டி பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு கடந்த 23ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இதில் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும், 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிசிக்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் மருந்துகள் தெளிக்கப்பட்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.