களக்காடு : களக்காடு வடமலைசமுத்திரம் குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஜீயர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். களக்காடு அருகே வடமலைசமுத்திரம் குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோயிலில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு யாக சாலையில் பல்வேறு பூஜைகள் நடந்த வந்தன. கும்பாபிஷேக தினமான நேற்று காலை கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து உற்சவர் குருவாயூரப்பன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
விழாவை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பிச்சம்மாள் கொடியசைத்து துவக்கிவைத்தார். விழாவில் திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு ஆழ்வார்திருநகரி ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார். முன்னதாக அவருக்கு கோயில் வாசலில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் எழுத்தாளர் ராஜநாராயணன், களக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து அன்னதானம், சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாலை வழுக்கு மரம் ஏறுதல், உறியடிபோட்டி மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ராமகிருஷ்ணன், சுப்புலட்சுமி தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.