குலசேகரம் : திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 416 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 2007ம் ஆண்டு தமிழக அரசு மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. 2015ம் ஆண்டு தொடங்கிய மூலவரின் கடுசர்க்கரை யோக விக்ரகத்திற்கு மூலிகை சாந்து பூசும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கோயிலில் ஓவியங்கள் சீரமைக்கும் பணிகள், மேற்கூரை பழுது பார்த்தல், விமானம் சரிசெய்தல் முதலான பணிகள் நடந்து வருகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பு பத்தனம் திட்டா மாவட்டத்தில் இருந்து 72 அடி நீள தேக்கு மரம் திருவட்டாறுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது 69.8 அடி நீளம் கொண்ட கொடிமரமாக அந்த தேக்கு மரம் மெருகேற்றப்பட்டது. கொடிமரம் பிரதிஷ்டை இன்று நடக்கிறது. இதற்காக 2 கிரேன்கள் கோயில் வளாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 7 மணியில் இருந்து கொடி மரம் பிரதிஷ்டை தொடர்பான பூஜைகள் ஆரம்பமாகும். காலை 9.50 மணி முதல் 10.20 மணி வரையிலான நேரத்தில் கோயிலின் முன்புறம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செய்துள்ளது.